இன்றைய புனிதர் † (மே 31) ✠ கொமானா நகர் புனிதர் ஹெர்மியாஸ் ✠ (St. Hermias of Comana)

 † இன்றைய புனிதர் †

(மே 31)



✠ கொமானா நகர் புனிதர் ஹெர்மியாஸ் ✠

(St. Hermias of Comana)


மறைசாட்சி:

(Martyr)


பிறப்பு: தெரியவில்லை


இறப்பு: கி.பி. 160

கொமானா, கப்படோசியா

(Comana, Cappadocia)


ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை

(Eastern Orthodox Church)


நினைவுத் திருநாள்: மே 31


கொமானா நகர் புனிதர் ஹெர்மியாஸ், ஒரு ஆதிகால கிறிஸ்தவ திருச்சபையின் மறைசாட்சியும், ரோமன் கத்தோலிக்க மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகளின் புனிதரும் ஆவார். இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இப்புனிதர், ரோம இராணுவத்தில் (Roman army) சிப்பாயாக நெடுங்காலம் பணியாற்றியவர் ஆவார். கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்திற்காக கொடூரமாக துன்புறுத்தப்பட்டு மறைசாட்சியாக கொல்லப்பட்டார்.


ஹெர்மியாஸ், "போன்டஸ்" எனுமிடத்திலுள்ள (Comana in Pontus) "கொமானா" எனுமிடத்தில் ரோம இராணுவத்தின் சிப்பாயாக நீண்ட கால சேவையாற்றினார். "அன்டோனியஸ் பயஸின்" (Antoninus Pius) ஆட்சியின் கீழ் (கி.பி. 138-161) இராணுவ சேவையை நிறைவு செய்த இவர், தமது சேவைக்காக சம்பளமாகவோ ஏனைய படியாகவோ ஏதும் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். தமது விசுவாசத்தை கிறிஸ்துவில் அர்ப்பணித்தார்.


இவற்றை அறிந்த செபாஸ்டியன் (Sebastian) எனும் "கொமானா" எனுமிடத்தின் ஆளுநர் (Proconsul in Comana), கிறிஸ்துவில் விசுவாசத்தை மறுதலிக்கவும், ரோம பேரரசின்மேல் விசுவாசத்தை அறிக்கையிடவும் ஹெர்மியாசை அழைத்தான். அக்காலத்தில், ஆளுநர் என்பவர், பண்டைய ரோம் நாட்டில் ஏகாதிபத்திய அதிகாரம் கொண்ட பதவியாகும்.


ரோம ஆளுநர் செபாஸ்டியனின் (Sebastian) அழைப்பினை கடுமையாக நிராகரித்த ஹெர்மியாஸ், துன்புறுத்துவதற்காக அனுப்பப்பட்டார். சித்திரவதையாளர்களால் அவரது தாடை எலும்புகள் உடைக்கப்பட்டன. அவருடைய முகத்தின் தோல் உரிக்கப்பட்டது. பின்னர், எரியும் உலையில் எறியப்பட்ட இவர் மூன்று நாட்களின் பின்னர் எவ்வித காயங்களோ பாதிப்புகளோ இன்றி வெளிவந்தார். 


இவற்றையெல்லாம் கண்டு ஆத்திரம் கொண்ட செபாஸ்டியன், கொடிய விஷம் தயாரிக்கும் மந்திரவாதியான "மாரஸ்" (Marus) என்பவனின் உதவியை நாடினான். விஷம் தயாரிக்கப்பட்டு ஹெர்மியாஸ் அருந்த கொடுக்கப்பட்டது. ஆனால், அவ்விஷம் புனிதரை தீங்கு ஏதும் செய்யவில்லை. மீண்டும் கொடிய விஷம் தயாரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டது. பின்னரும் அதனால் எவ்வித பாதிப்பும் இல்லை என்றானதும், கிறிஸ்துவின் தெய்வீக சக்தியை உணர்ந்த "மாரஸ்" (Marus) கிறிஸ்துவில் தமது விசுவாசத்தை அறிக்கையிட்டு வெளிப்படுத்தினான். இதுகண்ட செபாஸ்டியன், உடனடியாக "மாரஸின்" (Marus) தலையை வெட்டிக் கொன்றான். புனிதர் "மாரஸ்" (Marus) தமது சொந்த இரத்தத்தாலேயே திருமுழுக்கு அளிக்கப்பட்டார். உடனேயே மறைசாட்சி எனவும் அறிவிக்கப்பட்டார்.


புனிதர் ஹெர்மியாஸ் புதிய துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டார். கொதிக்கும் எண்ணெயில் இடப்பட்டார். அவரது கண்கள் பிடுங்கப்பட்டன. தலைகீழாக மூன்று நாட்கள் தொங்கவிடப்பட்டார். ஆனாலும் அவர் கிறிஸ்துவில் தமது நன்றியை அறிவித்துக்கொண்டேயிருந்தார். இறுதியில், வெறி பிடித்த செபாஸ்டியன் இப்புனிதரின் தலையை தமது வாளால் வெட்டிக் கொன்றான்.

Comments

Popular posts from this blog

ஆண்டவருடைய விண்ணேற்றம் மே 12 ஞாயிறு