பொதுக்காலம் 13ஆம் வாரம் – ஞாயிறு 02 /07/ 2023*


https://kuttyjesu.blogspot.com/2023/06/13-02-07-2023-2-4-8-11-14-16.html


2 அரசர்கள் 4: 8-11, 14-16அ.


திருப்பாடல் 89.


உரோமையர் 6: 3-4, 8-11.


மத்தேயு 10: 37-42.


இறைவன் மீது அன்பு.


இன்றைய நற்செய்தி வாசகம் மத்தேயு 10 : 37 - 42 வரை உள்ள பகுதிகளை சற்று நேர்மறையாக சிந்தித்துப் பார்க்க அழைப்பு விடுக்கிறேன்.


இயேசு கூறுவது,

என்னுடைய சீடர்கள் யாரென்றால் தன் தந்தை, தாய், மகன் மற்றும் மகளை விட என்னிடம் மிகுந்த அன்பு கொண்டுள்ளவர்களும், தமது சிலுவையை சுமந்து கொண்டு என்னை பின்பற்றுபவர்களும், எனக்காக தன் உயிரை இழப்பவர்களுமே என் சீடராவார்.


இன்றைய நற்செய்தி வாசகமானது இயேசு தம் சீடர்களை பணிக்கு அனுப்பும் முன் வழங்கும் அறிவுரையின் ஒரு பகுதியாக மத்தேயு நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார். 


இயேசுவின் இந்த அறிவுரை பகுதியானது, இயேசுவை பின்பற்ற விரும்பியவர்கள் தங்களுடைய தந்தை தாய் மகன் மகளை விட்டுவிட வேண்டுமென்றல்ல, ‌மாறாக‌, தன் தந்தை, தாய், மகன் மகளை விட அவர் மீது அன்பு கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார்.


மாதா, பிதா, குரு தெய்வம் என்று தமிழில் பழமொழி ஒன்று உண்டு. இதை நாம் தவறாக புரிந்து வைத்திருக்க வாய்ப்பு இருக்கின்றது. இந்தப் பழமொழியின் பின்னணியில் இறைவனைப் பின்னுக்குத் தள்ளும் பழக்கம் நம்மிடையே இருந்திருக்கலாம்.


ஆனால் இயேசு ஒரு சரியான புரிதலை நம்மிடையே விதைக்க விரும்புகின்றார். தாய் தந்தை குருவை கடந்து அவரிடம் வரவேண்டும் என்பதை அவர்களுக்கு கூறுகின்றார்.


அதாவது லூக்கா நற்செய்தி 3:51- ல் இதை நாம் ஆழமாக புரிந்து கொள்ள உதவும்.

இயேசு தனது பணி வாழ்வை தொடங்குவதற்கு முன்பு வரை தன் பெற்றோருக்கு பணிந்து நடந்தார் என்று பதிவிடுகின்றார்.

மேலும், கடவுள் மோசேக்கு கொடுத்த பத்து கட்டளைகளில் நான்காவது கட்டளையாக தன் தாய் தந்தையை மதித்து நட என்று உள்ளது.


மத்தேயு 25 : 40_ல் உள்ளது போல், மிகச் சிறியவராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்வதெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் என்கின்றார்.


ஆக இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், கண்ணுக்குப் புலப்படாத இறைவனை நம் கண்களுக்கு புலப்படும் மனிதர்கள் வழியாகவே நாம் காண முடியும் என்பதுதான், அல்லது தன் தாய் தந்தை, மகன், மகளை அன்பு செய்யாமல் இறைவனை அன்பு செய்ய முடியாது என்பதுதான்.


ஆனால் இன்றைய காலச் சூழலில் அளவுக்கு அதிகமாக பணத்தை சேர்த்து வைத்திருப்பதும், தன் தாய் தந்தையர்களை முதியோர் இல்லத்தில் விடுவதும் fashion ஆகிக் கொண்டுதான் இருக்கிறது.


தாய் தந்தையை விட மேலான செல்வம் உலகில் இல்லை என்பதை பலரும் இன்று உணராமல் போய்க் கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஆக தாய், தந்தை, மகன் மற்றும் மகளிடம் அன்பு கூறாமல் நாம் இறைவனிடம் அன்பு கூற முடியாது. 


இரண்டாவதாக இயேசு கூறும் சிலுவை. மத்தேயு நற்செய்தி 16 : 24- 25 வசனங்களில் இயேசு மீண்டும் இதே கருத்தை வலியுறுத்துவதை நாம் வாசிக்கின்றோம்.


இந்தக் கால கட்டத்திலிருந்து ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் நாம் சென்றோம் என்றால் தொடக்க கால கிறிஸ்தவர்கள் வாழ்ந்த காலத்தை நம்மால் அடைய முடியும். அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் இன்று நம்மை போல மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் இருந்திருப்பார்கள் என்று கூற முடியாது. 


கிபி 334 க்கு முன்பு வரை வாழ்ந்த கிறிஸ்தவர்கள் அடைந்த துன்பங்களையும் வேதனைகளையும் பட்டியலிட்டால் அது இந்த உலகமே கொள்ளாது என்று கூறலாம். கிறிஸ்தவர்கள் என்ற காரணத்திற்காக அவர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்கள் தங்கள் துன்பங்கள் நடுவிலும் இயேசு மீது கொண்டிருந்த நம்பிக்கையில் தளரவில்லை. அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கைதான் திருஅவைக்கு இன்று அடித்தளமும் ஆணிவேருமாக உள்ளது.


மறைசாட்சிகளின் இரத்தம் கிறித்தவ மறையின் வித்து. என்று கூற கேள்விப்பட்டிருப்போம். இன்றும் அதே அளவு வேதனைகளையும் துன்பங்களையும் பிரச்சனைகளையும் நாம் சந்தித்து கொண்டுதான் இருக்கின்றோம். குறிப்பாக நம் நடுவில் வாழும் மணிப்பூர் சகோதர சகோதரிகள் இன்றும் அதை அனுபவித்து கொண்டுதான் இருக்கிறார்கள். இருந்த போதிலும் அவர்கள் தெருக்களில் வந்து ஜெபம் செய்வது, தங்கள் நம்பிக்கையை அறிக்கையிடுவது என்ற செயல்கள் வழியாக, இறைவனோடு நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.


இந்தச் சூழ்நிலை நமக்கு வந்தால் நாம் என்ன செய்வோம்? இயேசு கூறிய அறிவுரைகளை நமதாக்கி வாழ்வோமா? ‌ அல்லது நமது மனம் விரும்பிய வழியில் வாழ்வோமா?


இன்றைய வாசகங்கள் நமக்கு கற்றுத் தரும் பாடம் என்ன? நம்மை பார்க்கிறவர்கள் நம்மை கிறிஸ்தவன் கிறிஸ்தவள் என்று அழைப்பார்கள்.


அதாவது கிறிஸ்து + அவன் அல்லது அவள். கிறிஸ்துவே அவனுள் அல்லது அவளுள் செயல்படுகிறார் என்பதே இந்த வார்த்தையின் பொருள்.


நம்மில் இயேசு கிறிஸ்து செயலாற்ற நாம் அனுமதிக்கின்றோமா? இயேசுவின் பணிவாழ்வு முழுவதும் உடனிருந்த யூதாசு இயேசுவை சரியாக புரிந்து கொள்ளாமல் வாழ்வை தொலைத்து விட்டான். ஆனால் இயேசுவை சரியாக புரிந்து கொண்ட நல்ல கள்வன், அவன் இறக்கும் தருவாயிலும் விண்ணரசை வென்று விட்டான்.


இதையே இயேசு கூறுகின்றார் 'என் பொருட்டு தன் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர்' என்று.


இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் நாம் பெற்ற திருமுழுக்கின் வழியாக நாம் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டுள்ளோம் என்பதை கற்றுத் தருகின்றார்.


இறுதியாக


நாமும் திருமுழுக்கின் வழியாக கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருக்கின்றோம். அவர் வழியில் நம்மால் செல்ல முடிகிறதா? என்று யோசித்துப் பார்ப்போம். ஒவ்வொரு மனிதனின் உண்மையான செல்வம் என்பது அவன் இந்த உலகில் செய்யும் நற்செயல்கள் மட்டுமே. நாமும் நமது செல்வத்தை பெருக்கிக் கொள்ள அருள் வேண்டி இறைவனோடு ஒன்றிணைவோம்.


இயேசுவின் பாதையில் சென்றிடுவோம்

இனி பயம் இல்லை நாமும் பயணத்தை தொடர்ந்திடுவோம்.


 ( குட்டி இயேசு )

Comments

Post a Comment

Popular posts from this blog

ஆண்டவருடைய விண்ணேற்றம் மே 12 ஞாயிறு