24, ஜூன், 2023.திருமுழுக்கு யோவானின் பிறப்பு பெருவிழா

 திருமுழுக்கு யோவானின் பிறப்பு பெருவிழா.


 ஏசாயா 49 : 1 - 6.

 திருப்பாடல் 139,

 திருத்தூதர் பணி 13 : 22 - 26.

 லூக்கா 1 : 57 - 66, 80.


 இறைவனின் கருவறை 


 நம் திரு அவையில் மூன்று நபர்களின் பிறப்புகளை பெருவிழாவாக கொண்டாட வேண்டும் என்ற மரபு உண்டு.

 முதலாவதாக நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, இரண்டாவதாக அன்னை கன்னி மரியாவின் பிறப்பு,

 மூன்றாவதாக இன்று நாம் விழா கொண்டாடும் திருமுழுக்கு யோவானின் பிறப்பு.

 இந்த உலகில் உயிர்கள் தோன்றுவதே அதிசயம் தான்.

 நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளையும் உயிருள்ள பொருள், உயிரற்ற பொருள் என்று நாம் வரையறுத்து விடுவோம். எதை கொண்டு இவற்றை உயிருள்ள பொருள் அல்லது உயிரற்ற பொருள் என்று வரையறுக்கிறோம்.

 ஒவ்வொரு உயிருள்ள பொருளும் எப்பொழுது அதன் வளர்ச்சியை, அல்லது வளர்வதை நிறுத்துகிறதோ, அப்போது அந்த பொருள் உயிரற்ற பொருளாகி விடுகிறது.

 உதாரணத்திற்கு ஓரறிவு கொண்ட மரங்கள் முதல் ஆறறிவு கொண்ட மனிதர்கள் வரை.

 பெரும்பாலும் உயிரோடு இருப்பவற்றை நாம் பொருள்கள் என்று கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டோம், மாறாக இறந்தது அல்லது உயிரற்ற வற்றையே நாம் பொருள்கள் அல்லது சொத்துகளாக கணக்கில் எடுத்துக் கொள்வோம்.

 ஆனால் இன்று நம் நடுவிலும் மனித உயிர்களையும் விலை பேசும் மனிதபிமானம் இல்லாத மனித மிருகங்களும் நடமாடிக் கொண்டுதான் இருக்கின்றன.

 மனித உடல் இறந்த பின்பு அதனுடைய உடல் பாகங்களை விற்று பணமாக்கும் நிகழ்வுகளும் நம் நடுவில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

 விலங்குகளை வேட்டையாடி பணமாக்கும் நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

 இவ்வாறு உயிர்களின் மதிப்பானது, மற்றவர்களுக்கு தெரியாமலே போய்க்கொண்டிருக்கிறது.

 ஆனால் அந்த உயிர் எவ்வளவு முக்கியம் என்பது அதை படைத்த இறைவனுக்கு தான் தெரியும்.

 உயிரானது உருபெறும் நிகழ்வு இயற்கையில் உள்ள அதிசயங்களில் தலைசிறந்த அதிசயமாகவே இருக்க முடியும்.

 மருத்துவத்துறையில் உள்ள அறிஞர்கள் மனிதன் கரு உருவதை ஒரு அதிசயமாகவும் ஒரு பிரம்மாண்டமாகவும் தான் பார்க்கிறார்கள்.

 அந்த உயிர் உருவாகும் கருவறை மிகவும் மதிப்புக்குரிய ஒன்று.

 தமிழ் இலக்கியங்களை எடுத்துக் கொண்டால், அல்லது கோவில்களின் வடிவமைப்புகளை எடுத்துக் கொண்டாலும், அதன் வெளிப்புறத்திற்கு பல பெயர்கள் இருந்தாலும், தெய்வம் இருக்கும் அந்த இடத்தின் பெயர் கருவறையாகவே இருக்கிறது.

ஆக ஒரு கோவிலின் மைய புள்ளி அதன் கருவரை தான்.

 இன்றைய வாசகங்களும் இறைவனை தாங்கும் கருப்பைகளாக நாம் இருக்க அழைப்பு விடுக்கிறது.

 கருவறை அல்லது கருப்பை என்பதற்கு சில பண்புகள் உண்டு.

அது அமைதியான இடம்.எந்தத் தீமைகளும் அண்டாத இடம்.எந்தக் கவலைகளும் இல்லாத இடம்.எந்த வேதனைகளும் இல்லாத இடம்.

 எந்தக் குழப்பங்களும் எந்தத் தேவைகளும் எந்த பயமும், எந்த கவன சிதறலும்  இல்லாத இடம்.

 அந்த இடத்தில் தாயும் சேயும் தொப்புள் கொடி மூலம் இணைக்கப்பட்டிருப்பார்கள்.

 நாம் ஒவ்வொரு நாளும் வந்து இறைவனை வழிபடும் இந்த ஆலயங்களும் இறைவனின் கருவறை தான், 

 இதுவும் அமைதியான இடம்தான் இங்கும் எந்த மனக்குழப்பமும் இல்லாத இடம்தான், சிறப்பாக இங்கு நாமும் இறைவனும் ஜெபம் என்னும் தொப்புள் கொடி வழியாக இணைக்கப்பட்டுள்ளோம்.

 இன்றைய முதல் வாசகத்தில் ஏசாயா இறைவாக்கினர் வழியாக இறைவன் நம்மை எவ்வாறு உருவாக்கினார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது, தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது நமக்கு உருகொடுத்து நம்மை தேர்ந்தெடுத்தவர் அவர் என்பதும், அவரின் கைகளின் நிழல் நம்மை பாதுகாத்து, பராமரிக்கிறது என்பதும் இங்கு தெளிவாகிறது.

 ஆக நாம் தாயின் கருவறையில் இருந்தாலும் நம்மை உருவாக்கியது அந்த இறைவன் தான்.

 இன்றைய இரண்டாம் வாசகத்தின் வழியாக, ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்திற்கு உகந்தவனாக கண்டேன். என்ற வார்த்தைகளின் வழியாக இன்று நாமும் இறைவனின் இதயத்திற்கு உகந்தவர்களாக வாழ வேண்டி அழைப்பு தரப்படுகிறது.

 இந்தப் பெருவிழா நமக்கு கற்றுத்தரும் பாடங்கள்.

1. இறைவனின் ஆலயங்களாக 

 நாம் ஆலயங்களில் இருந்து  வெளியில் செல்கின்ற பொழுது இறைவனின் கருவறையாக நாம் இருக்க இன்றைய வாசகம் நம்மை அழைக்கிறது.

இறைவனின் கருவறையாக நாம் எப்படி இருக்க முடியும் என்றால், இறைவனிடமிருந்து நாம் பெற்றுக் கொண்ட நன்மைகளை பிறருக்கு தருவதன் மூலமாகவும், இறை வார்த்தையை நமது வாழ்வின் வழியாக வாழ்ந்து காட்டுவதன் வழியாகவும்,

 இறையன்பை சுவைத்து பிறருக்கு தருவதன் வழியாகவும், நாமும் இறைவனின் கருவறைகளாக, இறைவனின் ஆலயங்களாக  இருப்போம்.

2. உயிர்களை மாண்போடு மதித்தல்

 இந்த உலகிலேயே உயிர்களை மதிக்காத பல தீமைகளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது,

 ஆலயங்கள் தீ பற்றி எரிகின்றன, மக்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு அகதிகளாக புலம்பெயர்ந்து கொண்டிருக்கின்றார்கள், தனது வாழ்வாதாரத்தை இழந்து தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதே தெரியாமல் இருக்கிறார்கள்.

 இப்படிப்பட்ட சூழலில் நாமும் இந்த சமுதாயத்தில் நடைபெறும் தீமைகளில் கலந்து கொள்ளாமல்,

 அந்த சமூகத் தீமைகளை எதிர்க்கும் துணிவு கொண்டு,

 இறைவனின் உன்னதக் குழந்தைகளாய், உன்னத கடவுளின் இறைவாக்கினர்காய், ஆண்டவருக்காக வழியை செம்மைப்படுத்துபவர்களாய் மாற வேண்டும்.

 இறைவன் நம்மை பாதுகாத்தது போல் நாமும் பிறரை பாதுகாக்க வேண்டும்.

3. இயேசுவுக்காக வழியை ஆயத்தம் செய்பவர்களாக 

 இயேசு பிறப்பதற்கு முன்பு இயேசுவின் வழியை ஆயத்தப்படுத்த வந்தவர்தான் இந்த திருமுழுக்கு யோவான். அவரது பிறப்பும் இயேசுவின் பிறப்பை போன்று அதிசயமான முறையில்தான் இருந்தது.

 எனவேதான் சுற்றி வாழ்ந்த அனைவரும் திருமுழுக்கு யோவானின்  பிறப்பை கேள்விப்பட்டு அஞ்சினார்கள். இந்தக் குழந்தை எத்தகையதோ என்று வியப்படைந்தார்கள்.

 நமது பிறப்பும் இந்த உலகில் அதிசயமான ஒன்றுதான், அதை அழகாக்குவதும் அழிவின் பாதையில் இட்டுச் செல்வதும் நமது கையில் தான் உள்ளது. நல்லதை செய்து நல் வாழ்வு வாழ்வோம்.

 கடவுளுக்கு அஞ்சு நடப்போறாக இருந்து, இறைவனின் மீட்பு செய்தியை நமதாக்கிக் கொள்வோம்.

இறுதியாக

இறைவனின் பணியை நான் செய்வேன் என்று முடிவெடுப்பது எளிது, ஆனால் அந்த இறைவனின் கருவறைகளாக தொடர்ந்து பணி செய்வதென்பது இன்றைய சூழலில் சவாலான ஒன்றுதான்.

என்னிடம் எல்லாமே இருக்கிறது என்று நினைக்க வேண்டாம், என்னிடம் எதுவுமே இல்லை என்று நினைக்க வேண்டாம்,

ஆனால் நம்மிடம் இறைவன்தந்த ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை நம்புங்கள், அதை வைத்து ஏதாவது நல்லது செய்யலாம் என்றும் முயற்சி செய்யுங்கள்.

சவால்களும் சாத்தியமாகும். இறைவனை நம்பி இருந்தால்

 ( குட்டி இயேசு )

Comments

Popular posts from this blog

ஆண்டவருடைய விண்ணேற்றம் மே 12 ஞாயிறு