திருவருகை காலம் மூன்றாம் ஞாயிறு

---


எண்ணம் போல் வாழ்வு


உங்களுக்கு அழுமூஞ்சி குழந்தையைப் பிடிக்குமா ?அழகாக சிரிக்கிற குழந்தையைப் பிடிக்குமா ? கொஞ்சம் யோசிப்போம்!!


சாமி கும்பிட கோவிலுக்குப் போனால் 

அங்கு சாமி சிரித்த முகத்தோடு அம்சமா இருந்தா பிடிக்குமா ?இல்லை கர்ணகடூரமா இருந்தா பிடிக்குமா ?


ஏதாவது பொருள்கள் வாங்க போனாலும் அந்தக் கடைக்காரர் சிரித்த முகத்தோடு வரவேற்றால் பிடிக்குமா ? அல்லது சிடு சிடுசிடு என்றால் பிடிக்குமா ? 


எப்போதும் அழுதுகொண்டும், புலம்பிக் கொண்டும் இருப்பவர்களை முதல் இரண்டு முறைக்கு அப்புறம் அவர்களைக் கண்டாலே ஓடி ஒளிந்து கொள்வோம் இல்லையா?


எண்ணம் போல் வாழ்வு.


யார் யார் எண்ணம் 

எப்படியோ, அப்படியே எல்லாம்.


ஆதலால், புலம்பல்களையும், சோகங்களையும் விட்டுத்தள்ளுங்கள்.


எதுவும் இங்கு மாறி 

கொண்டேதான் இருக்கும்.


மாற்றம் ஒன்றே மாறாதது.


---------


திருவருகை காலம் மூன்றாம் ஞாயிறு நமக்குத் தரும் செய்தி மகிழ்ச்சி.


ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள் பிலிப்பியர் 4:4. திருவருகை காலத்தின் மையமாக இருக்கும் இந்த நாளில், இயேசு அவர் பிறப்பு மனித குலத்திற்கு, மகிழ்ச்சியை கொண்டு வரும் ஒன்றாக இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள அழைப்பு விடுக்கிறது.


தனது மகளின் திருமணத்தின் பொழுது, தந்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் மேடையில் உள்ள ஒலிபெருக்கியில் வந்து ஒரு அறிவிப்பு தந்தார். எனது மகள் என்னுடைய வங்கி கிரெடிட் கார்டு அட்டையை என்னிடம் திரும்பிக் கொடுத்து விட்டால். நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் என்று கூறினார். மண்டபத்திலிருந்து அனைவரும் சிரித்த பொழுது, ஒருவர் மட்டும் அதிர்ச்சியோடு கலந்த பயத்தோடு அமர்ந்திருந்தார். அவர்தான் அந்த மணப்பெண்ணின் கணவர்.


இவ்வாறு ஒருவரின் மகிழ்ச்சி மற்றவருக்கு துன்பமாக இருக்கலாம். ஆனால் இங்கு நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக கண்ணுக்கு புலப்படாத கடவுள் மனு உரு ஏற்று, நமக்காக துன்பத்தை ஏற்றுக் கொண்டு, நம்மை பாவத்திலிருந்து விடுவித்து, நம் வாழ்வில் மகிழ்ச்சி தர பிறந்திருக்கிறார் என்னும் செய்தியை கேட்கும்பொழுது இயல்பாக மகிழ்ச்சி பொங்கும்.


பிறக்கும் குழந்தை ஒரு நாளைக்கு நானூறு முறை சிரிக்குமாம். அதே வளர வளர தான் சிரிக்கும் சிரிப்பின் எண்ணிக்கையை குறைத்து விட்டு, சிரிப்பிழந்து போய் நிற்குமாம்.


குடும்பத்தில் கட்டுப்பாடு, குடும்பப் பிரச்சினைகள், பிடிக்காத காரியங்களை செய்யும் பொழுது, இன்று பல காரணிகள் அந்த குழந்தையின் சிரிப்பை அழித்து விடுகிறது.


கவலைகள் நடுவிலும் தனது வாழ்வு இறைவனின் கைகளில் பத்திரமாக இருக்கிறது என்பதை உணர்ந்து இருந்தால் இறைவன் தரும் மகிழ்ச்சி எந்நாளும் நம்மை விட்டு விலகாது.


இயேசு கவலை ஏதும் இன்றி வாழ வேண்டும் என்பதை தனது வாழ்வில் சீடர்களுக்கு கற்றுக் கொடுத்தார். கடல் மீது நடப்பது, புயல் நடுவே தூங்குவது, சிறுபிள்ளைகளோடு விளையாடுவது, தொழுகை கூட தலைவர்களை வம்பு இழுப்பது, என்று இயேசுவின் வாழ்வின் அந்த அனைத்து துன்பங்களையும் அனைத்து இடர்களையும் பற்றி கவலைப்படாமல் இறைவனின் பாதுகாப்பு இருக்கும் என்பதை உணர்ந்து வாழ்ந்தார். அதே வாழ்வை நாமும் வாழ அழைப்பு விடுத்தார்.


இறுக்கமான மனநிலையைக் கொண்டிருப்பதன் வழியாக முதலில் நாம் நம்மில் இருந்து வேறுபடுகிறோம். பல நேரங்களில் கடவுளின் செய்தியை கூட இறுக்கமான மனநிலையோடு பகிர்ந்து கொள்கிறோம். அதனால் ஒருவருக்கு சென்றடைய வேண்டிய செய்தி சரியாக சென்றடைவதில்லை.


 பயணத்துக்கு கிளம்ப இருந்த தனது முதலாளியிடம், இரவு நேர காவலாளி கூறியது. ஐயா நீங்கள் பயணத்திற்கு போக வேண்டாம் நான் கனவு கண்டால் அது பலிக்கும். நீங்கள் பயணத்தில் இறப்பது போல கனவு கண்டேன். எனவே தயவு கூர்ந்து அந்த பயணத்தை நிராகரித்து விடுங்கள் என்று கூறினார். முதலாளி அவ்வாறே செய்தார், மறுநாள் செய்தித்தாளில் முதலாளி செல்லவிருந்த பேருந்து விபத்துக்குள்ளானதை வாசித்தார். உடனே அந்தப் பணியாளரை அழைத்து, நீ சொன்னது சரிதான் ஆக ஒவ்வொரு நாளும் இவ்வாறு தான் வேலை செய்யாமல் தூங்கிக் கொண்டிருக்கிறாயோ? நாளை முதல் உனக்கு வேலை கிடையாது என்று கூறினார்.


இறுக்கமான மனநிலைகள் நம்மை தவறான முடிவுகளை எடுக்க தோன்றுகிறது. அந்த இறுக்கமான மனநிலை வருவதற்கான காரணம். நமது துன்பங்கள் கடவுளின் பார்வையில் ஒன்றுமே இல்லை என்பதை உணராது இருக்கும் நிலை.


 இறைவா உன் திருமுன் ஒரு குழந்தை போல் என்ற பாடல் வரிகளை நாம் கேட்டிருப்போம். அதுபோல இறைவனின் கைகளில் நாம் குழந்தையாக இருக்கிறோம் என்பதை உணர வேண்டும்.


என் மகிழ்ச்சியில் பங்கு கொள்ளுங்கள் என்று இறைவன் அழைப்பு விடுக்கின்ற பொழுது. youtube வீடியோக்களிலும் instagram ரீல்ஸ்களிலும் நமது நம்பிக்கையை பதிய வைத்து விடக்கூடாது.


மகிழ்ச்சி பிறக்கும் இடம் ஆலயம். மகிழ்ச்சியை தருபவர் ஆண்டவர். மகிழ்ச்சியை நிலைக்கச் செய்வது அவரின் உடன் இருப்பு. மகிழ்ச்சியை பெறுக செய்வது நமது நல்ல செயல்கள். இவ்வாறு மகிழ்ச்சியை பெறுக செய்வதும். மகிழ்ச்சியை சுருக்கிக் கொள்வதும் நமது கைகளில் உள்ளது.


கூடுமானவரை மனதை ஆனந்தமாக வைத்துக்கொள்ளவும், முகத்தில் 

எப்போதும் ஒரு புன்சிரிப்பும் இருக்குமாறு நம்மை மாற்றிக் கொள்வது நலம்.


உங்கள் வீட்டுக் கண்ணாடி முன் 

நின்று சிரித்து பாருங்கள். எவ்வளவு அழகாக இருக்கிறீர்கள்.


சிரித்த முகத்தோடு, சந்தோஷமாக இருப்போம்.


சந்தோஷமாக நல்லதையே எண்ணுவோம். சந்தோஷத்தை வாரி வழங்குவோம். சந்தேகமே வேண்டாம்.

Comments

Popular posts from this blog

ஆண்டவருடைய விண்ணேற்றம் மே 12 ஞாயிறு