இன்றைய புனிதர் † (மே 30) ✠ புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் ✠ (St. Joan of Arc)

 † இன்றைய புனிதர் †

(மே 30)



✠ புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் ✠

(St. Joan of Arc)


தூய கன்னியர்; மறைசாட்சி:

(Holy Virgin and Martyr) 


பிறப்பு: ஜனவரி 6, 1412

டோம்ரேமி, ஃபிரான்ஸ் அரசு

(Domrémy, Kingdom of France) 


இறப்பு: மே 30, 1431 (வயது 19)

ரோவன், நோர்மண்டி

(அப்போது இங்கிலாந்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது)

(Rouen, Normandy - Then under English rule) 


ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

ஆங்கிலிக்கன் ஒன்றியம்

(Anglican Communion)


அருளாளர் பட்டம்: ஏப்ரல் 18, 1909

திருத்தந்தை பத்தாம் பயஸ்

(Pope Pius X) 


புனிதர் பட்டம்: மே 16, 1920

திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட்

(Pope Benedict XV) 


நினைவுத் திருவிழா: மே 30 


பாதுகாவல்:

ஃபிரான்ஸ்; இரத்த சாட்சிகள்; கைதிகள்; இராணுவத்தினர்; நம்பிக்கையினால் நிந்திக்கப்படுவோர்; “ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பெண் இராணுப் படையினர்” (Women's Army Corps); “ஐக்கிய அமெரிக்க கடற்படை ரிசர்வ் (மகளிர் ரிசர்வ்) அல்லது, “இரண்டாம் உலகப் போரின்போது தானாகவே முன்வந்து சேவையாற்றிய பெண்கள் படை” (Women Accepted for Volunteer Emergency Service in the World War II)


புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் (St. Joan of Arc), கி.பி. 1412ம் ஆண்டு, ஜனவரி மாதம், 6ம் தேதி, ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள “டாம்ரேமி” (Domrémy) என்ற இடத்தில் பிறந்தார் என நம்பப்படுகிறது. இவர் ஃபிரான்ஸ் நாட்டு வீராங்கனையும் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார்.


“ஓர்லியன்ஸ் பணிப்பெண்” (The Maid of Orléans) எனும் செல்லப்பெயர் அல்லது புனைப் பெயர் (Nickname) கொண்ட இவரது தந்தை “ஜாக்குஸ் டி ஆர்க்” (Jacques d'Arc) ஆவார். இவரது தாயார் “இஸபெல்லா ரோமி” (Isabelle Romée) ஆவார். இவர்களுக்கு பிறந்த ஐந்து குழந்தைகளில், ஜோன் மூன்றாவது குழந்தை ஆவார். இவரது தந்தை ஒரு விவசாயி. எனவே ஜோன் தனது குழந்தை பருவத்தில் தனது தந்தையுடன் சேர்ந்து விவசாயத்திலும் கால்நடை பராமரிப்பிலும் ஈடுபட்டு வந்தார். மேலும் ஜோன் தன் தாயாரிடம் இருந்து தனது மதம் மற்றும் அதன் கோட்பாடுகள் பற்றியும், வீட்டை பராமரிப்பதைப் பற்றியும் கற்றுக்கொண்டார். இவரது பெற்றோர்கள் ஆழ்ந்த இறை நம்பிக்கை உடையவர்களாகத் திகழ்ந்தனர். எனவே ஜோன் ஆழ்ந்த இறை சிந்தனையுடையவராகவே இருந்தார்.


"இறைதூதர் மிக்கேல்" (Archangel Michael), "புனிதர் மார்கரெட்" (Saint Margaret) மற்றும் "புனிதர் கேதரின்" (Saint Catherine of Alexandria) ஆகியோர் தமக்குக் காட்சி தந்ததாகவும், ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பிலிருக்கும் ஃபிரான்ஸ் நாட்டினை மீட்க நூறு வருட கால போரிடும் முடியிழந்த ஃபிரெஞ்ச் மன்னன் ஏழாம் சார்ளசுக்கு (The uncrowned King Charles VII) உதவுமாறு தமக்கு உத்தரவிட்டதாகவும் ஜோன் கூறினார். 


அந்நியரை “ஓர்லியன்ஸ்” (Orléans) பிராந்தியத்தை விட்டு விரட்டுவதற்காகவே கடவுள் தம்மைப் படைத்திருப்பதாக இவர் நம்பினார். மீட்புப் போரின் முதல் கட்டமாக ஓர்லியன்ஸ் (Orléans) முற்றுகைக்கு செல்லுமாறு ஏழாம் சார்ள்ஸ் உத்தரவிட்டார். ஜோன் ஃபிரெஞ்சு படையை தலைமை ஏற்று வழிநடத்தினார். இவரால் ஊக்கம் பெற்ற ஃபிரெஞ்சு வீரர்கள், இவரின் தலைமையின் கீழ் அந்நியரை வெற்றி கொண்டனர். இவர் ஃபிரெஞ்சு படையினர் நூறாண்டுப் போரின் போது பல முக்கிய வெற்றிகள் அடைய காரணமானார். இவையே ஃபிரான்சின் ஏழாம் சார்ளஸின் முடிசூடலுக்கு வழிவகுத்தது. 


ஆயினும் பர்கண்டியர்களால் (Burgundian) கி.பி. 1430ம் ஆண்டு, மே மாதம், 23ம் நாளன்று, போர்க் கைதியாக பிடிக்கப்பட்ட இவர், ஃபிரான்சின் எதிரிகளான ஆங்கிலேயரிடம் விற்கப்பட்டார். அவர்கள் "பேயுவைஸ்" ஆங்கில சார்பு ஆயரான "பியேர் கெளசொன்" (pro-English Bishop of Beauvais Pierre Cauchon) துணையோடு இவரை சூனியக்காரி எனவும், தப்பறை கொள்கையுடையவர் எனவும் பொய் குற்றம் சாட்டி, இவரின் 19ம் வயதில் இவரை உயிரோடு தீமூட்டிக் கொன்றனர். இவர் இறந்து 25 ஆண்டுகளுக்குப் பின், திருத்தந்தை மூன்றாம் கலிக்ஸ்டஸால் (Pope Callixtus III) இவரின் வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு, இவர் மீதிருந்த குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இவர் குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இவர் கத்தோலிக்க மறைசாட்சி என அறிவிக்கப்பட்டார்.


பின்னர் இவருக்கு புனிதர் பட்டமளிப்புக்கான பணி துவங்கப்பட்டு, கி.பி. 1909ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 18ம் நாளன்று, திருத்தந்தை பத்தாம் பயஸ் (Pope Pius X) அவர்களால், “நோட்ரே டேம் டி பாரிஸ்” (Notre Dame de Paris) ஆலயத்தில் அருளாளர் பட்டமும், 1920ம் ஆண்டு, மே மாதம், 16ம் நாளன்று, திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட் (Pope Benedict XV) அவர்களால் ரோம் நகரின் “தூய பேதுரு பேராலயத்தில்” (St. Peter's Basilica) புனிதர் பட்டமும் அளிக்கப்பட்டது. இவரின் நினைவுத் திருநாள் மே மாதம் 30ம் நாள் ஆகும்.

Comments

Popular posts from this blog

ஆண்டவருடைய விண்ணேற்றம் மே 12 ஞாயிறு